விதுர நீதி பகுதி 16
...
{ஆசையும் கோபமும்}
அதனால்தான் பாண்டவ தூதன் கிருஷ்ணன் ..பாண்டவர்க்காக துரியோதனனிடம்
தூது சென்ற போது விதுரர் மாளிகையில் தங்கினார்..
வில்லுக்கு விதுரன்..
விஜயனை விட சிறந்த வில்லாளி விதுரர்..
விதுர நீதி...
ஓ! மன்னாஈ {திருதராஷ்டிரரே},
பெரிய மீன் ஒன்று வலையின் மெல்லிய கயிறுகளை அறுப்பது போல,
ஆசையும் கோபமும் ஞானத்தை அறுக்கும்.
..
அறத்தையும் பொருளையும் இவ்வுலகில் மதித்து வெற்றியின் வழிவகைகளை அடைய முயல்பவன்,
தான் வேண்டுவது அனைத்தையும் அடைந்து மகிழ்ச்சியை வெல்கிறான்.
...
மனம்சார்ந்த தனது ஐந்து எதிரிகளைக் கட்டுப்படுத்தாத ஒருவன்,
பிற புற எதிரிகளை வீழ்த்த விரும்பினால், உண்மையில் அவற்றால் {அந்த ஐந்து எதிரிகளால்} வீழ்த்தப்படுகிறான். தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தாத தீய மனம் கொண்ட மன்னர்கள், நாடாசையின் காரணமாகத் தங்கள் செயல்களாலேயே அழிவடைகிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம்.
...
{தீயோருடன் நட்பு}
..
ஈரவிறகு, காய்ந்த விறகோடு எரிவது போல, பாவிகளோடு நிலைத்த தொடர்புடைய பாவமற்ற மனிதனும் தண்டிக்கப்படுகிறான். எனவே, பாவிகளோடு ஏற்படக்கூடிய நட்பைத் தவிர்க்க வேண்டும்.
...
அறியாமையில் இருப்பவன், பேராசை கொண்ட தனது ஐந்து எதிரிகளைக்(ஐம்புலன்கள்) கட்டுப்படுத்த தவறி,
ஐந்து தனித்துவமான பொருட்களைக் கொண்டு பேரழிவில் மூழ்குகிறான்.
..
1.கபடமற்ற தன்மை,
2.எளிமை,
3.தூய்மை,
4.மனநிறைவு,
5.இனிமையான பேச்சு,
6.சுய கட்டுப்பாடு,
7.உண்மை,
8.உறுதி
ஆகியன எப்போதும் தீயவர்களிடம் இருக்காது
...
1.தன்னறிவு {ஆத்மஞானம்},
2.உறுதி,
3.பொறுமை,
4.அறத்தில் அர்ப்பணிப்பு,
5.ஆலோசனைகளைக் கமுக்கமாக வைத்துக் கொள்வது,
6.ஈகை ஆகியவை
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே},
இழிந்த மனிதர்களிடம் இருப்பதில்லை.
....
போலிக் குற்றச்சாட்டுகள், தீய உரைகள் மூலம் மூடர்கள் ஞானிகளுக்குத் தீங்கிழைக்கின்றனர்.
இதன் விளைவாக ஞானிகளால் செய்யப்பட்ட பாவங்களை அந்த மூடர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஞானிகள் தங்கள் பாவங்களில் இருந்து விடுபட்டு இப்படியே மன்னிக்கப்படுகின்றனர்.
...
தீய குணத்தாலேயே தீயவர்கள் பலம் பெறுகிறார்கள்;
குற்றவியல் சட்டத்திலும்,
பலமற்றவர்களையும் பெண்களையும் கவனமாகப் பார்த்துக் கொள்வதிலுமே மன்னர்களின் பலம் இருக்கிறது. மன்னிக்கும் தன்மையிலேயே {பொறுமையிலேயே} அறம்சார்ந்தவர்களின் பலம் இருக்கிறது.
(மன்னிப்பதனால் பலம் அதிகரிக்கிறது)
..
{பேச்சு [உரை]}
...
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},
பேச்சைக் கட்டுப்படுத்தவதே மிகவும் கடினமானது என்று சொல்லப்படுகிறது.
பொருள் நிறைந்த வார்த்தைகளுடன் கேட்பவர்களுக்கு இனிமையாக நீண்ட உரையை ஆற்றுவது என்பது எளிதானதல்ல.
நன்கு பேசப்பட்ட பேச்சு, பல நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்;
தீமையாகப் பேசப்பட்ட பேச்சு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தீமைகளுக்குக் காரணமாக இருக்கும்.
..
கணைகளால் துளைக்கப்பட்ட அல்லது கோடரியால் வெட்டப்பட்ட காடு மீண்டும் வளரலாம்,
ஆனால் காயப்படுத்தும் வகையில் தீய வார்த்தைகளால் நிந்திக்கப்பட்டுக் காயமடைந்த இதயம் மீண்டெழுவதில்லை {ஆறுவதில்லை}.
...
கணைகள், குண்டுகள், பராசங்கள் ஆகிய ஆயுதங்களை உடலில் இருந்து எளிதில் எடுத்துவிடலாம்,
ஆனால், இதயத்தின் ஆழத்தில் குத்தப்பட்ட வார்த்தைகளாலான குறுவாளை வெளி உருவி எடுப்பது இயலாதது.
..
வார்த்தைக் கணைகள் வாயில் இருந்து அடிக்கப்படுகின்றன. அதனால் தாக்குண்ட ஒருவன் அல்லும் பகலும் வருந்துகிறான். பிறரது உயிரையே அது தொட்டுவிடுவதால், கற்ற மனிதன் அத்தகு கணைகளை அடிக்கக்கூடாது.
...
விதுர நீதி
உண்மையான தர்மம் எது ?
இன்றைய பதிவில் உண்மையான தர்மம் எது என்பதை விதுரர் திருதராஷ்டிரனுக்கு அரசரான சூதன்வானுக்கும் அந்தணனான விரோசனனுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு உரையாடல் மூலம் விளக்குகிறார். அதற்கு முன் சூதன்வான், வீரோசனன் இருவரும் யாரென தெரிந்து கொள்ளலாம்.
சூதன்வான், வீரோசனன் பற்றி ஒரு அறிமுகம்
உலகின் தோற்றத்தில் கல்ப காலத்தில் பிரம்மனுக்கு ஆறு மகன்கள் இருந்தனர். அவர்கள் மரிச்சி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது ஆகியோர் ஆவர்.
மரிச்சி முனிவரின் மகன் காசியபர் ஆவார். காசியபரிடமிருந்தே அனைத்து உயிர்களும் தோன்றின.
தக்ஷனுக்கு (பிராஜாபதிகளில் ஒருவர்) நற்பேறு பெற்ற பதிமூன்று {13} மகள்கள் இருந்தனர். {காசியபரே இந்த தக்ஷனின் 13 மகள்களுக்கும் கணவராவார்.}
அந்த தக்ஷனின் மகள்களின் பெயர்கள் பின்வருமாறு: அதிதி, திதி,தனு, கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிராதா, விஸ்வா*, வினதை, கபிலா, முனி மற்றும் கத்ரு ஆவர்.
திதிக்கு ஹிரண்ய கசிபு என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். அந்த சிறப்புமிகுந்த ஹிரண்யகசிபுவுக்கு உலகம் போற்றும் ஐந்து மகன்கள் இருந்தனர். எல்லோருக்கும் மூத்தவனின் பெயர் பிரஹலாதன், அடுத்தவன் ஸாஹ்ரதன், மூன்றாமவன் அனுராதா, அவனுக்கு அடுத்தவர்கள் சிபியும், வஷ்கலாவும் ஆவர்.
அந்த பிரஹலாதனுக்கு மூன்று மகன்கள் இருந்தனர் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அவர்கள் விரோசனா, கும்பா மற்றும் நிகும்பா ஆவர்.
விரோசனா மணக்க ஆசைப்பட்ட கேசினி என்னும் திருமகள் மணக்க ஆசைப்பட்ட அந்தணன் சூதன்வான். வீரோசனன் அசுர குலம். சூதன்வான் அந்தணர் குலம். இருவரும் கேசினியை மணப்பதற்காக அவரவர் குல தர்மங்களை விவாதிக்கிறார்கள். அவர்கள் தரப்பு நியாயமான கருத்துக்களை மேற்கோள் காட்டி உண்மையான தர்மம் எது என்று விதுரர் கூறுகிறார்.
எல்லோரிடமும் சமமாக அன்பு செலுத்துதல் பற்றி திருதராஷ்டிரனுக்கு விதுரர் கூறிய தர்மம்.
தன்னை தானே அறிந்து வாழும் மனிதர்கள் மற்றும் மன்னர்கள் பற்றி அறிந்த திருதராஷ்டிரன் விதுரனிடம் “ அறத்திற்கும் பொருளுக்கும் ஏற்புடைய இத்தகு வார்த்தைகளை எனக்கு மீண்டும் அறிவுறுத்துவாயாக. அவற்றைக் கேட்கும் தாகம் எனக்கு அடங்கவில்லை. நீ சொல்வது அழகாக இருக்கிறது. உலக தர்மம் பற்றி எனக்கு விளக்கமாக கூறு, ” வேண்டினார்.
விதுரன் திருதராஷ்டிரனிடம் , “புனித இடங்கள் அனைத்திலும் நீராடுவதும், அனைத்து உயிரினங்களிடத்தும் அன்பு காட்டுவதுமாகிய இரண்டும் சமமே. அனைத்து உயிரினங்களிடமும் அன்பு காட்டுவது புனித இடங்களில் நீராடுவதை விட ஒரு வேளை விஞ்சியதாக இருக்கலாம். திருதராஷ்டிரரே நீங்கள் உமது மகன்கள் அனைவரிடமும் அன்பைக் காட்டுவீராக. அதனால், இவ்வுலகில் பெரும் புகழை வெல்வீர், அதனால் இவ்வுலகில் தங்கள் காலத்திற்கு பிறகு நீர் சொர்க்கத்தை அடைவீர்.
ஒரு மனிதனின் நற்செயல்கள் எவ்வளவு காலம் இவ்வுலகில் பேசப்படுமோ, அவ்வளவு காலம் அவன் சொர்க்கத்தில் மகிமைப் படுத்தப்படுகிறான்.
அதனை தங்களுக்கு புரிய வைக்க ஒரு கதை கூறுகிறேன், ”என்று கூறி விட்டு அசுரனான சூதன்வானுக்கும் அந்தணனான விரோசனனுக்கும் இடையே.நடந்த நிகழ்வை கூறுகிறார்.
கேசினியின் சுயம்வரம்
ஒரு காலத்தில், ஒப்பற்ற அழகுடன் கூடிய கன்னிகை ஒருத்தி, கேசினி என்ற பெயரில் இருந்தாள். ஒரு நல்ல கணவனை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்ட கேசினி சுயம்வரத்தில் தனது தலைவனைத் தேர்ந்தெடுக்கத் தீர்மானித்தாள்.
அப்போது திதியின் மகன்களில் {அசுரர்களில்} ஒருவனான விரோசனன் அந்தக் கன்னிகையை {கேசினியை} அடைய விரும்பி, சுயம்வர இடத்திற்குச் சென்றான். தைத்தியர்களின் தலைவரான விரோசனனை கண்ட கேசினி, அவனிடம்
“ஓ! விரோசனரே, அந்தணர்கள் மேன்மையானவர்களா? திதியின் மகன்கள் {அசுரர்கள்} மேன்மையானவர்களா?
அந்தணர்கள் மேன்மையானவர்கள் எனில் நான் விரும்பும் சூதன்வான் ஏன் என் மஞ்சத்தில் அமரக்கூடாது?” என்று கேட்டாள்.
அதற்கு விரோசனன் கேசினியிடம், “பிரஜாபதியிடம் இருந்து எழுந்த அசுரர்களாகிய நாங்களே சிறந்தவர்கள். நாங்களே அனைத்து உயிர்களுக்கும் மேலானவர்கள், இவ்வுலகம் எங்களுடையது என்பதில் ஐயமில்லை. அதற்கு முன் தேவர்கள் யார்? பிராமணர்கள் யார்? என்பதற்கு விளக்கம் கொடு ” என்று கேட்டான்.
அதற்குக் கேசினி விரோசனரிடம், “ நாம் இவ்விடத்திலேயே இருப்போமாக. நாளை இங்கே சூதன்வான் வருவார். அவரிடமே இதற்கு பதில் கேளுங்கள். அப்போது நீங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் காண என்னை அனுமதிப்பீராக” என்றாள்.
அதற்கு விரோசனன் {கேசினியிடம்}, “ஓ இனியவளே, அச்சமுடைய பெண்ணே {கேசினி}, நீ சொல்வதை நான் செய்வேன். காலையில் நானும் சூதன்வானும் இருவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதை நீ காண்பாய்” என்றான்
“இரவு கடந்து, சூரிய ஒளி எழுந்ததும் பொழுது விடிந்தது.மறு நாள் தொடர்ந்தது ,
மறுநாள் சுயம்வர மண்டபத்தில், கேசினியுடன் விரோசனன் காத்திருந்த இடத்திற்கு, சூதன்வான் வந்தான். அங்கே விரோசனனையும், கேசினியையும் தனக்காக சுயம்வர மண்டபத்தில் காத்திருக்க கண்டான். சூதன்வான் அங்கே வந்ததைக் கண்ட கேசினி, தனது இருக்கையில் இருந்து எழுந்து அவனுக்கு ஓர் இருக்கையை அளித்து, கால் கழுவ நீரும், ஆர்க்கியாவும் கொடுத்தாள். பின் அவளே சூதன்வானை வரவேற்று உரிய வரவேற்பும் அளித்தாள்.
வீரோசனன் சூதன்வான் வாதம்
அப்போது விரோசனன் தனது இருக்கையைப் பகிர்ந்து கொள்ளும்படி கேட்க, சூதன்வானோ விரோசனனிடம் , “ஓ! விரோசனா, நான் உனது அற்புதமான தங்க இருக்கையைத் தொட்டாலும், உனக்குச் சமமாக என்னைக் கருதிக் கொண்டு, உன்னுடன் அதில் அமர மாட்டேன்” என்றான்.
அதற்கு விரோசனன் “ஒரு பலகைத் துண்டு, ஒரு விலங்கின் தோல், புல்லாலோ வைக்கோலாலோ ஆன பாய், ஆகியவை மட்டுமே, உமக்குப் பொருத்தமானவை. எனினும், ஒரே இருக்கையை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் தகுதி உமக்கு இல்லை.என்றாலும் கேசினியின் வேண்டுகோளுக்காகவே ஒரே இருக்கையில் ஒன்றாக அமர சம்மதித்தேன் ” என்று நகைச்சுவையாக பதில் கூறினான்.
அதற்குச் சூதன்வான் விரோசனனிடம், “தந்தை மற்றும் மகன், ஒரே வயதும், சமமான கல்வியும் கொண்ட பிராமணர்கள், இரு க்ஷத்திரியர்கள், இரு வைசியர்கள், இரு சூத்திரர்கள் ஆகியோர் ஓர் இருக்கையில் ஒன்றாக அமரலாம். இவர்களைத் தவிர வேறு யாரும் ஒன்றாக அமரக்கூடாது.
நான் அமர்ந்ததைவிடத் தாழ்ந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, உன் தந்தையான பிரஹலாதன் எனக்கு மரியாதை செலுத்தி என்னோடு உரையாடுவது வழக்கம். நீயோ எல்லா ஆடம்பரங்களுடனும் வீட்டில் வளர்க்கப்பட்ட குழந்தை என்பதால், சமூக பழக்க வழக்கம் எதையும் உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றான்.
அதற்கு விரோசனன் சூதன்வானிடம் , “அசுரர்கள் மத்தியில் இருக்கும் எல்லாத் தங்கத்தையும், பசுக்களையும், குதிரைகளையும், பிற வகைச் செல்வங்களையும் நான் பந்தயமாக வைக்கிறேன். இந்தக் கேள்விக்குத் தகுந்த பதிலை அளிக்க வல்லவர்களிடம் சென்று நாம் கேட்போம். வாரும்” என்றான்.
அதற்குச் சூதன்வான், “உனது தங்கம், பசுக்கள், வீரர்கள் ஆகியவற்றை விடு, ஓ! விரோசனா, நமது உயிர்களை இழக்கும்படி பந்தயம் வைத்து, இக்கேள்விக்குத் தகுந்த பதிலளிக்க வல்லோரிடம் கேட்போம்” என்றான்.
விரோசனன், “நமது உயிர்களைப் பிணை வைத்து, நாம் எவ்விடம் செல்வோம்? தேவர்கள் முன்னிலையிலோ, மனிதர்களில் எவர் மத்தியிலோ நான் நிற்க மாட்டேன்” என்றான்.
அதற்குச் சூதன்வான் விரோசனனிடம், “நமது உயிர்களைப் பிணையாக வைக்கும் நாம், உனது தந்தை பிரகலாதனை அணுகுவோம். பிரஹலாதன், தன் மகனுக்காகக் கூடப் பொய்மையை ஒருபோதும் சொல்ல மாட்டான்” என்றான்.
இப்படிப்பட்ட பந்தயத்தை ஏற்றுக் கொண்ட விரோசனன் மற்றும் சூதன்வான் ஆகிய இருவரும் கோபத்தால் உந்தப்பட்டு, பிரஹலாதன் இருக்குமிடத்திற்குச் சென்றனர். அவர்கள் இருவரையும் ஒன்றாகக் கண்ட பிரஹலாதன், “முன்பு ஒருபோதும் சேர்ந்து காணப்படாதவர்கள், இப்போது கோபம்கொண்ட இரு பாம்புகள் போல ஒரே சாலையில் ஒன்றாக வருகின்றனரே” என்று நினைத்து, “எப்போதும் சேராத நீங்கள், இப்போது சேர்ந்துவிட்டீர்களா? ஓ! விரோசனா,நான் உன்னைக் கேட்கிறேன். உனக்கும் சூதன்வானுக்கும் இடையில் நட்பேற்பட்டதா?” என்று கேட்டான் பிரகலாதன் .
அதற்கு விரோசனன் பிரகலாதனிடம், “எனக்கும் சூதன்வானுக்கும் இடையில் எந்த நட்பும் கிடையாது. மறுபுறம் நாங்கள் எங்கள் உயிர்களைப் பந்தயமாக வைத்துள்ளோம். தந்தையே, நான் உம்மை ஒரு கேள்வி கேட்பேன், அதற்குப் பொய்யாகப் பதிலளிக்காதீர்!” என்றான்.
""அதற்குப் பிரஹலாதன்,“மதிப்பிற்குரிய சூதன்வான் இளைப்பாற நீரும், தேனும், தயிர்க்கடைசலும் சூதன்வானுக்குக் கொண்டுவரப்படட்டும்.என தன் சேடிகளுக்கு கட்டளையிட்டார்.
பின் சூதன்வானிடம் , “ ஓ! அந்தணா, நீ எங்களது வழிபாட்டுக்குத் தகுந்தவன். உனக்கு அளிப்பதற்காக பருத்த ஒரு வெண்பசு உனக்குத் தயாராக இருக்கிறது” என்றான் பிரகலாதன்.
தீர்ப்பு கூறுபவனின் சங்கடம்
அதற்குச் சூதன்வான் பிரஹலாதனிடம் , “ தங்கள் அன்புக்கு நன்றி மகாராஜா . நீர், தேன் மற்றும் தயிர்க்கடைசல் ஆகியவை, இங்கே வரும் வழியிலேயே எனக்கு வழங்கப்பட்டன. நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன்., அதற்கு உண்மையான பதிலளிக்க வேண்டுகிறேன்! பிராமணர்கள் மேன்மையானவர்களா? அசுரர்கள் மேன்மையானவர்களா ?” என்று கேட்டான்.
அதற்குப் பிரஹலாதன்,“ஓ!சுதன்வானா, இவன் எனது ஒரே மகன். நீயும் இங்கே இருக்கிறாய். பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்களும், நான் அறிந்தவர்களும், எனது அன்பிற்குரியவர்களுமான நீங்கள் இருவரும் இங்கே இருக்கும்போது, என்னால் எப்படி இதற்கு தக்க பதிலளிக்க முடியும்?” என்று கேட்டான்.
சூதன்வான் பிரஹலாதனிடம் , “உன்னிடம் இருக்கும் உன் பசுக்களையும் பிற விலைமதிப்பற்ற செல்வங்களையும் உனது மகனுக்குக் கொடு. ஆனால், ஓ! ஞானம் கொண்டவனே பிரகலாதா, இருவர் சர்ச்சை செய்து வரும்போது, அரசரான நீயே அதில் உண்மையைத் தீர்மானிக்க வேண்டியவன் ” என்றான்.
பொய் கூறுபவனின் குலம் எப்படி பாதிக்கப்படுகிறது?
அதற்குப் பிரஹலாதன், “ஓ! சூதன்வான், தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு உண்மையில்லாமல் பொய்யைச் சொல்லி, தனது நாவைத் தவறாகப் பயன்படுத்துபவன் எப்படிப்பட்ட பாதிப்படைவான்? இதை நானே உன்னிடம் கேட்கிறேன். பதில் கூறும் ” என்றான்.
அதற்குச் சூதன்வான் பிரகலாதனிடம் ,
இரவு நேரத்தில், தன் சக்களத்தின் கரங்களில் துயிலும் தனது கணவனைக் காணும் ஒரு கணவனைப் பிரிந்த மனைவி ஏங்குவதைப் போலவும்,
சூதாட்டத்தில் பகடையில் தோற்ற ஒரு மனிதன் மனம் வேதனைப்படுவது போலவும்,
சுமக்க முடியாத பெரும் துன்பச் சுமையால் தாங்க முடியாமல் கீழே விழுபவன் போலவும், நாவைத் தவறாகப் பயன்படுத்துபவன் பாதிக்கப்படுவான்.
அப்படிப்பட்ட மனிதன், நகரத்தின் வாயில்களைக் கடந்து உள்ளே செல்ல தடை செய்யப்பட்டு நகரத்தின் வாயில்களுக்கு வெளியே பட்டினியுடன் தங்க வேண்டியிருக்கும். போலி சாட்சிகளைக் கொடுப்பவன், உண்மையில், எதிரிகளையே எப்போதும் கண்டடையும்படி வாழ விதிக்கப்படுகிறான்.
ஒரு விலங்கின் காரணமாகப் பொய் பேசுபவனது தலைமுறையினரில்
ஏறுமுக வரிசையில் ஐந்து மூதாதையர் வானரசில் {சொர்க்கத்தில்} இருந்து கீழே தள்ளப்படுகின்றனர்.
ஒரு பசுவின் காரணமாகப் பொய் பேசுபவனது பத்து மூதாதையர் சொர்க்கத்தில் இருந்து கீழே தள்ளப்படுகின்றனர்.
ஒரு குதிரையின் காரணமாகப் பொய் சொன்னால் நூறு மூதாதையரின் {சொர்க்கத்தில் இருந்து தள்ளப்படும்} வீழ்ச்சிக்கும்,
ஒரு மனிதனின் காரணமாகப் பொய்சொன்னால், தனக்கு முன் ஏறு வரிசையில் ஆயிரம் மூதாதையரின் {சொர்க்கத்தில் இருந்து தள்ளப்படும்} வீழ்ச்சிக்கும் காரணமாக இருப்பான்.
தங்கத்தின் காரணமாகச் சொல்லப்படும் பொய்யால், தனது குலத்தில் பிறந்த, பிறக்காத அனைத்து உறுப்பினர்களும் அழிவுக்குள்ளாகிறார்கள்.
நிலத்தின் காரணமாகச் சொல்லப்படும் பொய்யால் {ஒருவனுடைய} அனைத்தையும் அவன் பாழாக்கிக் கொள்கிறான். எனவே, எந்த சூழ்நிலையிலும் ஒருபோதும் பொய் பேச கூடாது” என்றான் சூதன்வான்.
சூதன்வான் விளக்கம் கேட்ட பிரஹலாதன் தந்த தீர்ப்பும் , சூதன்வான் முடிவும்
பிரஹலாதன் தன் மகன் விரோசனனிடம், “விரோசனா, அங்கிரஸ் என்னைக் காட்டிலும் மேன்மையானவர், அதே போல, சூதன்வான் உன்னைக் காட்டிலும் மேன்மையானவன். சூதன்வானின் தாய் உன் தாயைக் காட்டிலும் மேன்மையானவள். எனவே, ஓ! விரோசனா, நீ சூதன்வானால் வீழ்த்தப்பட்டாய். இந்தச் சூதன்வானே இப்போது உனது உயிருக்குத் தலைவனாவான் . ஆனால், ஓ! விரோசனா, நீ சூதன்வானுக்காக உனது உயிரைக் கொடுக்க வேண்டும் எனவே நான் விரும்புகிறேன்” என்றான்
அதற்குச் சூதன்வான் பிரஹலாதனிடம், “ஓ! பிரஹலாதா, அறத்தைத் தேர்ந்தெடுத்து, மோகத்தால் நீ பொய் சொல்லாதிருந்ததால், நான் உன் அன்பிற்குரிய மகனின் உயிரை அவனுக்கே அளிக்கிறேன். என்னால் உனக்கு மீட்டளிக்கப்பட்ட உனது மகன் இதோ இருக்கிறான். எனினும், அவன், கன்னிகை கேசினியின் முன்னிலையில் எனது காலைக் கழுவி தனக்குரிய மரியாதை செலுத்த வேண்டும்” என்றான் .வீரோசனனும் அதனை ஏற்றுக் கொண்டு சுதன் அவனுக்கு உரிய மரியாதை அளிக்கிறான்.
திருதராஷ்டிரனது இறுதி காலம் பற்றி விதுரர் தந்த எச்சரிக்கை
தொடர்ந்து விதுரர் திருதராஷ்டிரனுக்கு கூறுகிறார்
“இக்காரணங்களுக்காக, நிலத்தின் மீது கொண்ட ஆசையின் காரணமாகப் பொய்மை பேசுவது பின்னரே உமக்குத் தகாது. உமது மகனின் மீது கொண்ட பாசத்தால் பொய் சொன்னால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது பிள்ளைகள், அமைச்சர்கள் ஆகிய அனைவருக்கும் அழிவு விரைந்து வரும். மாடு மேய்ப்பவர்களைப் போலக் கையில் தடிகளைக் கொண்டு மனிதர்களை தீமையிலிருந்து தேவர்கள் பாதுகாப்பதில்லை; ஆனால், பாதுகாக்கப்பட வேண்டும் என்று தாங்கள் விரும்புவோருக்கு, அவர்கள் நல்ல புத்தியை அளிக்கின்றனர்.
ஒருவன் நீதி மற்றும் அறநெறிகள் ஆகியவற்றில் கொண்டுள்ள கவனத்தின் விகிதத்தின் படியே ஒருவன் தனது நோக்கங்களில் வெற்றியடைகிறான் என்பதில் ஐயமில்லை. பொய்மையில் வாழும் ஏமாற்றுகர மனிதனை, வேதங்கள், பாவத்தில் இருந்து மீட்பதே இல்லை.
புதிதாய் சிறகு படைத்த பறவைகள் தங்கள் கூடுகளைக் கைவிடுவதைப் போல, ஏமாற்றுகர மனிதன் மரணப்படுக்கையில் கிடக்கையில், அவன் கற்றறிந்த கல்வியும் வேதங்களும் அவனைக் கைவிடுகின்றன.
குடிப்பழக்கம், சண்டை, அதிக எண்ணிக்கையிலான மனிதர்களிடம் பகை, திருமணம் தொடர்பான அனைத்து மோதல்கள், கணவன் மனைவிக்கு இடையேயான உறவின் முறிவு, உட்பகை, மன்னனுக்குத் துரோகம் ஆகியவை ஏமாற்றுகர மனிதனின் செயலாகும். அவர்களது இறுதிக் காலம் யாருமற்ற தனிமையில் நரக வேதனையில் கழியும். அத்தகைய நிலைக்கு நீங்கள் ஆட்படக் கூடாது என்பதற்காகவே அழைத்ததும் ஓடி வந்தேன் என்றார் விதுரர்.
--